வெற்றியைத் தேடித்தரும் வராஹி அம்மன்


தஞ்சையில், சோழமன்னர் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அதிசய தலம் கட்டிட கலையின் சிறப்பையும், தமிழர்களின் கலாசார பெருமையையும் உலகிற்கு பறைசாற்றுகிறது.

தஞ்சையில், சோழமன்னர் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அதிசய தலம் கட்டிட கலையின் சிறப்பையும், தமிழர்களின் கலாசார பெருமையையும் உலகிற்கு பறைசாற்றுகிறது.

சோழமன்னர்களின் வெற்றி தேவதையாக வராஹி அம்மன் விளங்கினாள். சோழ மன்னர்கள் எந்தச் செயலையும் தொடங்கும் முன்பு வராஹிக்கு சிறப்பு வழிபாடு செய்வர். ராஜராஜ சோழன் வராஹி அம்மனை வழிபட்ட பின்னரே எதையும் செய்வார். குறிப்பாக போருக்கு புறப்பட்டுச் செல்லும் போது வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின்னர் தான் செல்வார். அதனால் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றனர். இதனால் வராஹி அம்மன் சோழர்களின் வெற்றி தெய்வம் ஆனாள்.

வழிகாட்டிய வராஹி

தஞ்சை பெரிய கோவிலில் பெரு வுடையார் ஆலயத்தின் அக்னி திசையில், அம்பாள் சன்னிதிக்கு எதிரில் வராஹி அம்மனுக்கு கோவில் உள்ளது. ராஜராஜசோழன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டுவதற்கு பல இடங்களை தேர்வு செய்தார். ஆனால் ஒரு இடமும் சரியாக அமையாமல் இருந்தது. ஒருநாள் வேட்டைக்கு புறப்பட்டு சென்ற போது, ஒரு இடத்தில் அவருக்கு எதிராக பன்றி ஒன்று எதிர்த்து நின்றது. அதனை அவர் துரத்தி சென்றார். ஆனால் அது போக்கு காட்டி பல இடங்களுக்கு சென்று ஒரு பெரிய திடலில் வந்து படுத்துக் கொண்டது. இதனால் வியப்படைந்த ராஜராஜசோழன் அதனை கொல்லாமல் துரத்தினார். 

ஆனால் அது எழுந்து நின்று காலால் பூமியை தோண்டியது. இது குறித்து ராஜராஜசோழன் அரண்மனை ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டார். அப்போது கோவில் கட்ட இடத்தினை, வராஹி தேவி தேர்ந்தெடுத்து இருப்பதை தெரிவித்தார் ஜோதிடர். அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராஹிக்கு சிறிய கோவில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கினார் ராஜராஜன். அன்னையின் அருளால் உலகம் போற்றும் பெரிய கோவிலை கட்டினார்.

வராஹியின் உருவம்

மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவரது அவதார சக்தியாக உருவானவள் வராஹி, சப்த கன்னிமார்கள் பிராமி, வைஷ்ணவி, மகேஷ்வரி, கவுமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி இவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன், குமரன், இந்திரன், யமன், திருமால் ஆகிய தெய்வங்களின் சக்திகள். இவர்களில் வராஹி, பன்றி முகமும், பெண்ணின் உடலும் கொண்டவர். நான்கு கரங்களை உடையவர். பின்இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டிருப்பார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பார். 

சக்தி வழிபாட்டு முறையில் ராஜராஜேஸ்வரி என்ற ஸ்ரீ வித்யா வழிபாடு சிறப்பானது. இவருக்கு நான்கு கைகள், முன்கைகளில் கரும்பு வில், புஷ்பபாணங்களையும், மேல்கைகளில் அங்குசம், பாசமும் ஆயுதங்களை கொண்டிருப்பவர். இந்த நான்கு ஆயுதங்களும் நான்கு சக்திகளாக உருப்பெருகின்றன. இவற்றில் கரும்பு வில் சியாமளாவாகவும், புஷ்பபாணங்கள் வராஹியாகவும், அங்குசம் சப்தகன்னிகளாகவும், பாசம் அஸ்வாரூடாவாகவும் உருப்பெறுகின்றன. 

ஆனிமாதம் அமாவாசை கழிந்த பஞ்சமி திதியில் ஸ்ரீ வித்யாவின் கையில் இருந்த புஷ்பபாணங்கள் வராஹியாக உருவாகின. இவற்றில் வராஹி அம்மன் படைத்தலைவியாக இருப்பதால் தேவி மகாத்மியத்தில் வரக்கூடிய மதுகைடபவதம், சும்பரிசம்பவதம், சண்டமுண்டவதம், மகிஷாசுரவதம் போன்ற அசுரர்களுடைய யுத்தத்தில் முக்கிய பங்கு வகித்தது. அம்பாள் வெற்றியைத் தேடித் தருகிறாள். 

சக்தி வழிபாட்டு சங்ககாலம் முதலே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சக்தி வழிபட்டிற்கும் நவராத்திரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. புரட்டாசி மாதம் அமாவாசையை அடுத்து சாரதா நவராத்திரி, தை அமாவாசையை அடுத்து சியாமளா நவராத்திரி, பங்குனி அமாவாசைக்கு அடுத்து வருவது வசந்த நவராத்திரி, ஆனி அமாவாசையை அடுத்து ஆஷாட நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவியான வராஹி அம்மன் பக்தர்கள் வேண்டிக் கொள்வதை வழங்கக் கூடியவள். விவசாயம், வீடு, நிலம் தொடர்பானவற்றில் வெற்றியை அருள்பவள். பயிர்களை விளைவிப்பதும், பலன்தருவதும் கடமையாக கொண்டவள்.

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலில் ஆனி மாத அமாவாசைக்கு பின் வரும் 10 நாட்களும் ஆஷாட நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அப்போது ஸ்ரீவராஹி தேவிக்கு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வராஹி தேவிக்கு ஒவ்வொரு நாளும் பூமியில் விளையும் பொருட்களை கொண்டு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது. ஆஷாட நவராத்திரியில் வராஹிதேவியை வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், நீதிமன்ற வழக்குகள், நிலத்தகராறு பிரச்சினைகள் சுமுகமாகும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திங்கட்கிழமையிலும், வழக்கு, பூமி சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமையிலும், கடன் தொல்லைகளில் அவதிப்படுபவர்கள் புதன்கிழமையிலும் வழிபட நலன் கிடைக்கும். 

குழந்தைவரம், கல்வியில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற வியாழக்கிழமையிலும் வழிபடலாம். வெள்ளிக்கிழமைஅன்று வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல், தோஷம் நீங்கும். சனிக்கிழமையன்று வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடி வெற்றிபெறும். மாதத்தில் வருகிற வளர்பிறை, தேய்பிறை, பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபட்டால் நல்லது.

வராஹி அம்மனை 16 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி ஒருமனதோடு தர்ம சிந்தனையில் வழிபட்டால் எல்லா வகையிலும் வெற்றி கிட்டும்.

Post a Comment

Previous Post Next Post